Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ்தான்: பிரணாப் முகர்ஜி

ஜுலை 20, 2019 02:35

புதுடெல்லி: டெல்லியில் இந்தியாவின் வாக்குறுதியை மேலும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

நிதி மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, இந்தியா 2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக (சுமார் ரூ.350 லட்சம் கோடி) ஆகி விடும் என்று கூறினார். இது திடீரென வானத்தில் இருந்து வந்து விடாது. இதற்கு காரணம், நல்ல வலுவான அடித்தளம் போடப்பட்டதுதான். இந்த அடித்தளத்தை ஆங்கிலேயர்கள் போட்டு விடவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்தியர்கள்தான் (முந்தைய அரசுகள்) போட்டு வந்துள்ளனர்.

5 ஆண்டு திட்டங்கள் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கான தொலைநோக்கு பார்வையால் கட்டமைக்கப்பட்டவை ஆகும். இந்த திட்டங்களின் அடிப்படையில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. 55 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் நாடு சுதந்திரம் அடைந்தபோது எப்படி இருந்தது, இப்போது நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை கண்டுகொள்வதில்லை.

ஆமாம். மற்றவர்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை நமது முன்னோடிகள் போட்டனர். அவர்கள் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உறுதியாக நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் இப்போது இருப்பவர்கள் திட்டக் கமிஷனையே கலைத்து விட்டார்கள். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக ஆகிறது என்றால், நாங்கள் நாடு சுதந்திரம் அடைந்தபோது பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்த பொருளாதாரத்தை 1.8 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறோம்.

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக ஆகிறது என்றால் அதற்கான அடித்தளத்தை ஜவகர்லால் நேரு, மன்மோகன்சிங், நரசிம்மராவ் உள்ளிட்டவர்களின் முந்தைய அரசுகள்தான் போட்டன. ஜவகர்லால் நேரு மற்றும் பிறரும் உருவாக்கிய ஐ.ஐ.டி.க்கள், இஸ்ரோ, ஐ.ஐ.எம்., வங்கிச்சேவைகள்தான் நாட்டின் பொருளாதாரம் உச்சத்தை தொட காரணம். அந்த அடித்தளத்தைக் கொண்டுதான் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்